22/05/2014

அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!

சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில் மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பல்வேறு
வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.


24 பேர் மட்டும்...

பி.காம்., பி.காம். செகரடெரிஷிப், பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., மனையியல் மற்றும் உணவியல் (ஹோம் சயின்ஸ் - நியூட்ரிஷன்), பி.எஸ்சி. காட்சிவழி தகவல் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்), பி.ஏ. பாதுகாப்பு மற்றும் போர்த்திறனியல் (டிபென்ஸ்) போன்ற படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம்.

இதுகுறித்து அம்பேத்கர் அரசு கல்லுாரி, பாதுகாப்பு மற்றும் போர்த்திறனியல் துறை தலைவர் முரளிதரன் கூறியதாவது: சென்னையிலேயே, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரியில்தான், பி.ஏ. டிபென்ஸ் படிப்பு இருக்கிறது. இந்த படிப்பிற்கு 24 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

பாதுகாப்பு தொடர்பான பதவிகளுக்கு ஆசைப்படும் மாணவருக்கு, அந்த துறையை பற்றிய அடிப்படை அறிவை இந்த படிப்பு தரும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரைக்குமான கட்டமைப்புகளை பற்றியும், அவை சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும், எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் இந்த படிப்பு விளக்கும். படிப்பை முடித்தவுடன் எம்.ஏ. டிபென்ஸ், எம்.ஏ. சோஷியல் ஒர்க்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

வேலை வாய்ப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் பாதுகாப்பு ஆய்வாளர், நுண்ணறிவு ஆய்வாளர், படை வீரர் உள்ளிட்ட ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வுக்கும், மற்ற குடிமை பணி தேர்வுகளுக்கும் இந்த படிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

பன்னாட்டு, அரசு, தனியார் பாதுகாப்பு துறைகளில் ஆலோசகராகவும், தகவல் தொடர்பு அலுவலர்களாகவும், துாதர்களாகவும் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்பேத்கர் அரசுக்கல்லுாரி காட்சிவழி தகவல் தொடர்பியல் துறை (விஷுவல் கம்யூனிகேஷன்) தலைவர் எம். தேவேந்திரன் கூறியதாவது: தமிழகத்திலேயே மூன்று அரசு கல்லுாரிகளில்தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது. அதில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரியும் ஒன்று. எங்கள் கல்லுாரியில், இந்த பாடப் பிரிவிற்கு 40 மாணவர்கள் வரை சேர்த்து கொள்கிறோம். இதன் மூலம், ஓவியம், கிராபிக் டிசைன், போட்டோகிராபி, 2டி, 3டி, மாடலிங், அனிமேஷன், வீடியோ கிராபி, வீடியோ எடிட்டிங், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விளம்பர நிறுவனங்களில் இயக்குனர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், அனிமேட்டர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உணவியலில் என்ன?

அம்பேத்கர் கல்லுாரி மனையியல் - சத்துணவியல் துறை தலைவர் அன்னரஞ்சனி செல்லப்பா கூறியதாவது: சென்னையில் ராணி மேரி (மகளிர்) கல்லுாரி, காயிதே மில்லத் (மகளிர்) கல்லுாரி மற்றும் அம்பேத்கர் (இருபாலர்) கல்லுாரி ஆகிய மூன்று அரசு கல்லுாரிகளில்தான் ஹோம் சயின்ஸ் - நியூட்ரிஷன் படிப்பு உள்ளது.

இந்த படிப்பை முடித்தோர், தனியார், அரசு, சுயவேலை வாய்ப்புகளையும் பெறலாம். டயட்டீசியன், நியூட்ரிஷியன் போன்ற வேலைகளுக்கு, நட்சத்திர உணவகங்கள், மருத்துவமனைகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.


மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், உணவு தர ஆய்வாளர் போன்ற எண்ணற்ற வேலை வாய்ப்புகள், சமூக சேவை நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் உள்ளன. அது மட்டுமில்லாமல், பி.எட்., எம்.எஸ்சி நியூட்ரிஷன், புட் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி போன்ற படிப்புகளை படித்தும் நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தினமலர்/கல்விமலர்

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font