13/04/2014

பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழை ஆசிரியர்களுக்கு 'குட்டு' அவசியம்:தினகரன் தலையங்கம்

பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது, அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக உருவாக்குபவர்கள் என்பதால்தான்.எல்லாம் காசு என்று ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர்களில் சிலர் தொழில்பக்தியில் இருந்து தவறுவது வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், பொதுத் தேர்வு கேள்வித்தாள் பிழைகள்.

ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு கேள்வித்தாளை தயாரிப்பதற்காக ஒரு ஆசிரியர் குழுவை அரசு நியமனம் செய்கிறது. இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன், சம்பளமும் தரப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கேள்வித்தாளில் பிழை ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதற்காக மாணவர்கள் மதிப்பெண் கோருவதும், அரசு பரிசீலித்து, கருணை மதிப்பெண் அளிப்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் வழக்கமான செய்தி. இந்த ஆண்டும் அது வெளியாகிவிட்டது.

கேள்வித்தாள் என்பதை ஒற்றை நபர் மட்டும் தயாரிப்பதில்லை. ஒரு குழுவே ஒன்றிணைந்து தயாரிக்கிறது. அதற்கான விடையையும் தனியாக தயாரிக்கின்றனர். இவற்றை சரிபார்ப்பதற்கு தனியாக ஆசிரியர்கள் உள்ளார்கள். இதில் எந்த இடத்திலும் வெளியாட்கள் சம்பந்தப்படவில்லை. கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு வந்த பின்னர் மீண்டும் அதே ஆசிரியர்கள் சரிபார்க்கின்றனர். இவ்வளவுக்கு பின்னரும் தவறுகள் நடப்பது, நல்ல விருந்து சாப்பாட்டில் நங்கென்று ஒரு கல்லை கடித்ததுபோன்று கடுமையான உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.


மாணவர்கள் ஒரு தவறு செய்தால், சேர் மீது நிற்க வைத்து தண்டிப்பதும், அவர்களுக்கு குட்டு வைப்பதும் ஆசிரியர்களின் வாடிக்கை. அவர்கள் செய்யும் தவறுக்கு என்ன தண்டனை?தண்டனை கூட வேண்டாம், குறைந்தபட்சம் இதுபோன்ற தவறான கேள்வித்தாளை தயாரித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, விடைத்தாள் தயாரிப்புக்கான படியை முற்றிலும் ரத்து செய்து, அதே அளவு தொகையை அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் வருங்காலத்திலாவது இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுத்து நிறுத்த முடியும்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font